மொத்தப் பக்கக்காட்சிகள்

8.28.2011


                                            கவிஞர்  சக்தி  அருளானந்தம்  அவர்களின்  " பறவைகள் புறக்கணித்த நகரம்" கவிதை தொகுதியை  பலமுறை  படித்தேன். படிக்கிறேன். படித்துக் கொண்டே  இருக்கிறேன். கவிஞரின்  ஆற்றலை  அடையாளப்  படுத்துவனவாக, கவிதைகள்........!  திரு பெருமாள் முருகன்  அவர்களின் செறிவுமிக்க அணிந்துரை  மிக சரியாகத்  தேர்ந்து  'கூடு வனைதலையும்,குஞ்சு  அணைதலையும்' கவனப்படுத்தி, தலைப்பிலிட்டிருக்கிறார் .   கவிதையுடனான அனுபவத்தைப்  பகிர்ந்துக்  கொள்ளத் தேர்ந்த ஸ்பானிய  கவிதை  வரிகள்  எண்ணற்றவற்றைச்  சொல்லக்  காத்திருக்கும்  சூலுற்ற  தாயை உணர்த்துகின்றன.
                   கவிஞர்  அவர்களுக்கு  ஒரு கடிதம்  எழுத வெகு நாட்களுக்கு  முன்னமே  எண்ணியிருந்தேன். சுருக்கமாய்  சொல்லவோ எழுதவோ தெரியாத  மனுஷன் .... நான்.  நினைப்பதையெல்லாம்  எழுதிடனமு'னு தவிப்பேன்.  படிப்பவர்களின் பொறுமையை ரொம்பவுமே  சோதிப்பேன்.  மனுஷர்களில்  மிக மிக நல்லவர்கள்  ( தாங்கள் உட்பட....) என்னையும்  சகிப்பர். இப்போது எழுதியே  தீரனுமு'னு  ஆனது, ஏன்?   என்ற வினா எழல்லே'ன்னாலும்   சொல்றேன்.  அண்மையில்  உரையாற்றும்போது  என்னையுமறியாமல் ,  "அமர்பவன் ,  சித்தார்த்தனா  இருந்தா  போதி மரம்  புத்தனாக்கும்"  என்ற 'ஞானம்'  கவிதையின் வரிகளை  குறிப்பிட்டுவிட்டு .... என்னை  நானே  சிலாகித்தவாறு  மேடையிலிருந்து  இறங்க ,  அந்த  வரிகளால்  கவரப்பட்ட  சிறப்பு  விருந்தினர் (அவருமொரு  கவிஞர்)  நான்தான் என்று  கைகுலுக்கி  பாராட்ட ,  உண்மையை  பெருமையாய்ச் சொல்லி  மகிழ்ந்தேன்.  அந்த நினைவு  வந்திட எழுதிக்கொண்டு  இருக்கிறேன்.
                       கொண்டாட தெரியாமலேயே  கோடிகணக்கான  அரிய தருணங்கள்  குப்பையாகின்றன. எத்தனை கோடி கோடி இன்பம், அத்தனையையும்  அடையாளம் காட்டும்  படைப்பாளிகள்  மனிதம்  மிளிர, மலரச்  செய்பவர்கள். அவர்கள்  காட்டுகிறவரை , அவை வெறும்  காட்சிகளே. எனவே பொறுப்புமிக்க  படைப்பாளிகள் தத்தம்  படைப்புகளால்  நிலைக்கிறார்கள். நாம் இன்றும்  நினைக்கிறோம். கவிஞரின்  கவிதைகளில்  அத்தகைய  தெளிவை  அதனாலான  வலிவை  உணருகிறேன்.

                           அடிநாக்குத் தித்திப்பாய்........கோடு, முகவரி, நவீன மனுக்கள் (புது வடிவம்) , காலக்கோலம், (காலுரச  உயிர் உரசும்  மார்கழிக்  குளிர்) துரத்தல்களும்,  விடுபடல்களும், வெளி ( விலாசிட்டீங்க ...) குருதட்சனை,  நிர்வாணம்,  அறிதலற்று.. (தாக்கத்திலிருந்து  நான்  இன்னும் மீளவில்லை)....... இவை  நினைவில் . பாராட்டுக்கள் என்றால்  போதாதுதான்  எழுதுங்கள் ...... நாங்கள் வாசிக்கிறோம் என்பதற்காக  அல்ல .....நாங்கள்   வசிக்கிறோம் என்பதை  நினைவூட்ட..........